மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்திய மாபெரும் மகளிர் தின விழா - 2025
எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி" என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெறுகின்ற தேசிய மகளிர் தின நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மகளிர் தின நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் (07.03.2025) கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய முன்றில் பி.ப 2:30 மணிக்கு நடைபெற்றது.



மும்மத இறைவணக்கத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.விஸ்வ பரதகலாலயா நாட்டிய பள்ளி மற்றும் நிருத்திய கலாலய மாணவர்களின் நடனங்கள், கலாசார மத்திய நிலைய கலைஞர்களின் நாடகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் என்பன மகளிர் தினத்தை அலங்கரித்தன .



பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இடம் பெற்றது.கலந்துகொண்ட உத்தியோகத்தர்களையும், மகளிர் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் களிப்பூட்டும் வகையில் வினோத விளையாட்டுக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திர சோதி ஜெயதீஸ்வரன் அவர்களின் நன்றி உரையுடன் மகளிர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.















